Ads: Crescent builders - Coming Soon

அதிரை கிழக்கு கடற்கரை சாலையில் தொடர்ந்து விபத்துகள் நேர்ந்த வண்ணம் உள்ளன. இன்று மதியம் பிஸ்மி மெடிக்கல் அருகே முதியவர் மீது அதிவேகமாக கேடிஎம் பைக்கில் வந்த இளைஞர்கள் மோதியதில் அந்த முதியவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மக்கள் ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு அவரை மீட்டு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவர் தரகர் தெருவை சேர்ந்த அஜ்மல் (வயது 72) என்று தெரியவந்து உள்ளது.
இளைஞர்கள் எந்த விதமான பாதுகாப்பும் இன்றி அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்றும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதிரை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு முன் ஏரிப்புறக்கரை செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். அதற்கு சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காலை இழக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் ஒரு விபத்து கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்டு இருப்பது மக்களை கவலையடைய செய்துள்ளது. இந்த விபத்துகளை தடுக்க ஈசிஆர் சாலை வழியாக அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை நிறுத்தி காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.